அந்தமான் தீவுகளுக்கு பொங்கல் விழா சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு சேரன் அவர்களுக்கு நகைச்சுவைக் கவிஞர் கார்மான் வாசித்தளித்த கவிதை.
நீயே பொக்கிஷம்
செழுமைச் சேராவே!
சேராவைச் சேர்ந்திருக்கும்
(ச)சோதரியே!
வணக்கம்!
வாண்டுகளே,
உங்களுக்கும்தான்.
அழகனே,
தாகம் தணிய
நடிக்க வந்தாய்…
வாய்ப்புகள்
வாய்தா வாங்க
வந்து சேர்ந்தாய்
இயக்க…
யாரும் கிடைக்காமால்
நீயே இட்டாய்
ஆட்டோகிராஃப்.
எங்களின்
இதயப்புத்தகத்தில்
எப்போதும் உன்
ஃபோட்டோகிராஃப்.
(என் மனையாள் முன்மொழிந்தது) எனக்குத் தெரிந்து
எங்களூர் அரங்குகளில்
காலணிகளை கழற்றி
குத்துவிளக்கேற்றிய
குலக்கொழுந்து நீ!
திரையில் மட்டுமே
நடிப்பவனே,
அலங்கார நாற்காலிகள்-
“அலர்ஜி”யோ உனக்கு
எங்கு சென்றாலும்
அப்புறப்படுத்துகிறாய்
அவைகளை!
இளமையின் இரகசியம்
இடுவதையெலாம்
உண்பதில் இல்லை
என்றாய்.
நிம்மதியாய் வாழ்ந்தால்
எப்போதும்
இளமைத் தோற்றம்
நிலைத்திருக்கும்
என்றாய்.
காசுக்காய்,
எல்லோரும்
திரையில் கதை
பண்ணகாலத்தில்
மனசுக்காய்
க(வி)தை சொன்ன
மகாக்கவிஞன்,
மாமனிதன் நீ!
கற்றோர்க்கு
சென்ற இடமெல்லாம்
சிறப்பு.
நீ
கல்லாதவன் ஆயினும்
கிடைக்கப்பெற்றாய்…
காரணம்-
கற்பித்தாய்,
வாழ்க்கையை,
வாழும் முறையை
முறையாய்
நீ
கற்பித்தாய்
உன் படங்களால்.
பாடங்கள்
எமக்கவை!
பூவின் அதரம்
தொட்டுப் பேசும்
தென்றலாய்
உன் படங்களின்
உறவுகள் பேசுகின்றன.
உன்
திரைச்சித்திரங்களால்
எங்கோ
மூலையில்
இதயத்திலிருக்கும்
நெகிழ்ச்சி
முடிச்சினை
சுண்டிவிடுகிறாய்.
காதலியின்
கடிதம் கண்டு
கரையும் கண்களை
திரையில்
முதன்முதல்
பார்க்கையில்
கலைத்தாய்க்கு
நீ-
பிள்ளையாய்
பிறந்திருப்பது
புலப்படுகிறது.
உன்
இன்னொரு முகமும்
ஒலிவாங்கியை
நீ
பிடிக்கையில் தெரிந்தது.
அமைதியின்
ஆழம் பதிந்த
உன் கண்களின்
ரௌத்திரம்
அப்போது புரிந்தது…
அப்பப்பா…
ஜாலக்காரன் நீ.
உன் பேச்சிலோ-
எளிமையின் எளிமை
இறுதிவரை கண்டேன்.
கனவு காணச்
சொன்னாய்..
இலட்சியம்
கொள்ளச் சொன்னாய்…
இரண்டிற்குமாய்
எப்போதும் எப்போதும்
உழைக்கச் சொன்னாய்.
இலக்கை
அடையும்வரை
உழை, உழை,
பிழையிலாமால்
பிழையென்றாய்.
செய்யும் தொழிலை
செம்மையாய்
செய்யுங்கள்,
சில்லரைகள்
வாங்குவதை
விட்டொழியுங்கள்
என்றாய்.
சந்ததியற்கு
தாய்மொழி
தரச் சொன்னாய்.
தத்தம் மனைவியை
நிறைவாய்
நேசிக்கச் சொன்னாய்.
அப்பன் ஆத்தாளை,
சொந்தங்களை,
பந்தங்களை
களையாதிருங்கள்
என்றாய்.
காசு பணம்
வந்தால்
கட்டு வீட்டை,
சொந்த மண்ணில்…
சொத்து வைத்தாலும்
அப்பன் ஆத்தா
ஊரில் வை…
சொல்லிவைத்தாய்
மதுரைமண்ணின்
மகனே!
எங்கும் போ..
எதுவும் செய்..
இறுதியில்-
இளைப்பாற நேரமாயின்,
சொந்தக்கூட்டிற்கு-
உன் சொந்தமெலாம்
குவிந்திருக்கும்
அந்த
சொர்க்கக்கூட்டிற்கு
தப்பாமல் வந்துவிடு
இழந்ததையெலாம்
இனியும் பெற்றிடலாம்
என்றாய்.
திரைவியாபாரத்
திமிலங்கள்
திருடிவிட்ட
தமிழ்ச்சினிமாவை
திருப்பித்தர-
சேரா,
நீ செய்வாயா
ஒரு யாகம்…??
தவமாய்த் தவமிருந்து
பெற்றவைகளை
மீட்டுத் தா
அம்மாச்சியின்
அருந்தவப் பேரனே!!
அதுவரை,
உன்
நினைவுகளை
அருந்திக் கொண்டிருப்போம்.
எல்லோருடனும்
இன்பமாய் வாழ
வாழ்த்துகிறோம்…
உனக்கும்
உன் கலைக்கும்
வணங்குகிறோம்!!!
நன்றியும், வணக்கமும்!!
-தமிழ் இலக்கிய மன்றம்
அந்தமான் தமிழர் சங்கம்
போர்ட் ப்ளைர்
7:08 மாலை
17.01.2011